December 30, 2009

இலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு


நான் எனது முன்னைய பதிவில் எதிர்வுகூறியது போலவே, அடுத்துவரும் பங்களாதேஷ் முக்கோணத் தொடருக்கான இலங்கை அணியில் அதிரடியான, அவசியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அண்மையக் காலத்தில் பிரகாசிக்கத் தவறிய அத்தனை பெரிய தலைகளுக்கும் ஆப்பு.

இனிப் பொட்டி கட்டவேண்டியது தானா?

அண்மையில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருபது ஆண்டுகளைப் போற்ர்த்தி செய்த சனத் ஜெயசூரிய, கொஞ்சக் காலமாக உலகின் அத்தனை துடுப்பாட்ட வீரர்களையும் அச்சுறுத்திவந்த பந்துவீச்சாளர்கள் லசித் மாலிங்க, அஜந்த மென்டிஸ் மற்றும் எதிர்காலத் தலைவர் என்று பில்ட் அப் கொடுக்கப்பட்டு வந்த சாமர கப்புகெடற ஆகிய நால்வருமே வெளியேற்றப்பட்ட பெரும் தலைகள்.

ஆனாலும் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட திலான் சமரவீர மத்திய வரிசைத் துடுப்பாட்ட வரிசைக்குப் பலமூட்ட எனத் தப்பித்துள்ளார்.

இலங்கை அணிக்கு மறுபக்கம் இன்னொரு இடி..
முக்கியமான நான்கு வீரர்கள் காயம் காரணமாக பங்களாதேஷ் செல்ல முடியவில்லை.

இந்தியத் தொடரில் விளையாடமுடியாமல் போன முரளிதரன், டில்ஹார பெர்னாண்டோ, அஞ்சேலோ மத்தியூஸ் ஆகியோரோடு கடைசிப் போட்டிக்கு முன்னதாக காயமுற்ற மகேல ஜயவர்தனவும் இலங்கை அணியில் இடம்பெறவில்லை.

இதன் காரணமாக அனுபவமில்லாத ஒரு இளைய அணியாகவே இந்த முக்கோணத் தொடரில் இலங்கை களமிறங்குகிறது.. போகிறபோக்கில் பங்களாதேஷும் இலங்கை அணியைத் துவைத்தெடுக்கும் போலத் தெரிகிறது.
மகேளவும் இல்லாததன் காரணமாகத் தான் சமரவீர தப்பித்துக் கொண்டார்.. ஆனால் தேர்வாளர்கள் கிழட்டு சிங்கம் சனத் மீது தமது இரக்கப் பார்வையை செலுத்தவில்லை.

இதேவளை சுவாரய்சமான விஷயம் என்னவென்றால் கொல்கத்தா இரவு விடுதி சம்பவத்தை அடுத்து தண்டனைக்கு உள்ளாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டில்ஷான் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரகசியமாக அவருக்கு எச்சரிக்கை&தண்டனை வழங்கப்பட்டத்தாக உள்ளகத் தகவல்கள் மூலம் அறிந்தேன்.

அண்மைக்காலமாக உள்ளூர்ப் போட்டிகளில் பிரகாசித்துவந்த நால்வருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கப்படக்கூடிய,பாராட்டக் கூடிய விடயம்.

இந்த வருட ட்வென்டி உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின்னர் முதல் தடவையாக இலங்கை அணிக்குத் தெரிவாகியுள்ளார் சாமர சில்வா. இந்தப் பருவ காலத்தில் கழகமட்டத்தில் வீகமாகவும்,தொடர்ச்சியாகவும் ஓட்டங்கள் குவித்துவந்த சில்வா தேசிய அணியில் விட்ட இடத்தை மீண்டும் நிரந்தரமாக்கிக் கொள்வாரா பார்க்கலாம்..
சிறிது காலம் முன்பாக சாமர இலங்கை அணியில் இல்லாத போட்டிகளை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது.

அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்த சுழல் பந்துவீச்சாளர் மாலிங்க பண்டார உள்ளூர்ப் போட்டிகளில் ஏராளமாக விக்கெட்டுக்களை வாரியெடுத்து மீண்டும் வருகிறார். ஆனால் தற்போது இலங்கை அணியின் முதல் சுழல் தெரிவு சுராஜ் ரன்டிவ் தான்.

காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் திலான் துஷார அணிக்கு வருவது இலங்கை அணிக்கு நிச்சயம் உற்சாகத்தை வழங்கும்.

நான்காமவர் வருவதில் எனக்கு மிகவும் திருப்தி..
20 வயதே ஆன இளம் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னே.
ராகம கிரிக்கெட் கழகத்தின் வீரரான லஹிரு, இந்தப் பருவகாலத்தில் ஓட்டங்களை மலையாகக் குவித்துவந்துள்ள ஒருவர்.
எட்டு போட்டிகளில் இரு சதங்கள், ஐந்து அரைச் சதங்கள்.
இறுதியாக இடம்பெற்ற போட்டியில் கூட அவர் பெற்ற ஓட்டங்கள் 144 &74 .

இப்படிப்பட்ட ஒரு ரன் மெஷினை இனியும் எடுக்காமலிருந்தால் அது தவறு இல்லையா?

லஹிரு திரிமன்னே

லஹிரு திரிமன்னே பற்றி கடந்த சனிக்கிழமை 'அவதாரம்' விளையாட்டு நிகழ்ச்சியில் நான் எதிர்வுகூறியது - " இன்றும் சதமடித்துள்ள திரிமன்னே என்ற இந்த வீரரின் பெயரைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. வெகுவிரைவில் இலங்கை அணியில் இடம் பிடிப்பார்"

எப்பூடி?

பெயர்களைப் பார்க்கையில் இந்த இலங்கை அணி மிக அனுபவமற்ற அணியாகவும் பலத்தில் குறைந்ததாகவும் தெரிந்தாலும் கூட, ஆச்சரியங்கள் அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய திறமை உடையது என்று எண்ணுகிறேன்.

ஆனாலும் இது சங்கக்காரவுக்கு ஒரு சவால்..

ஆனாலும் சங்கக்கார மகிழ்ச்சியா இருக்கிறார்.. காரணம் இங்கிலாந்தின் லங்காஷயர் பிராந்தியத்துக்கு அடுத்த பருவகாலத்தில் விளையாடவுள்ளார்.
இந்தப் பிராந்தியத்துக்காக விளையாடும் மூன்றாவது இலங்கையர் சங்கா.. (முரளி,சனத்துக்கு அடுத்தபடியாக)

இந்தியா முழுப்பலத்தோடும் உத்வேகத்தோடும் ஆனால் சச்சின் இல்லாமலும் வருகிறது..
மறுபக்கம் ஊதிய,ஒப்பந்தப் பிரச்சினை காரணமாக பங்களாதேஷ் இன்னொரு மேற்கிந்தியத்தீவுகளாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது..

ஜனவரி நான்காம் திகதி இந்த முக்கோணத் தொடர் ஆரம்பிக்கிறது.

வெளிநாடுகளில் இன்று இரு கிரிக்கெட் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன..

ஆஸ்திரேலியா பாகிஸ்தானை வதம் செய்தது எதிர்பார்த்ததே..
இன்றைய வெற்றியுடன் பொன்டிங் மேலும் இரு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற தலைவர் (42 டெஸ்ட் போட்டிகள்) .. தனது முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோவை முந்தினார்.
தான் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக வெற்றி பெற்றவர். (93 டெஸ்ட் போட்டிகள்)
அடுத்த பத்துக்கும் மேற்பட்டவர்களும் ஆஸ்திரேலியர்களே..
ஸ்டீவ் வோ, ஷேன் வோர்ன், க்லென் மக்க்ரா, அடம் கில்க்ரிஸ்ட்.....

ஆனால் தென் ஆபிரிக்காவின் சொந்த மண்ணில் வைத்து இங்கிலாந்து தென் ஆபிரிக்காவை இன்னிங்சினால் மண் கவ்வ செய்தது யாருமே எதிர்பாராதது.
இதன் விளைவாக இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் இன்னும் நீடித்த காலம் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.



21 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

i'm very sad about sanath

Nishan said...

Appu okay anna.. but orediya ellarayum nirutthinathu Namakku sarivu than...

சயந்தன் said...

தலைப்பைப் பார்த்தால் ஏதோ அரசியல் டபுள் மீனிங் போல இருக்கே.. :)

Nishan Thirumalaisami said...

பெருந்தலை எல்லாம் ஒரேடியா போனது நமக்கு சரிவுதான்... வரும் தொடர பார்க்கலாம்...

தர்ஷன் said...

சனத்துக்கு வாய்ப்பு வழங்கப்படாததில் ஏதோ அரசியல் இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். முரளிக்கும் இனி என்ன நடக்குமோ தெரியாது. அஜந்தா மென்டிஸ் இத்தனை சீக்கிரம் இப்படி ஆவார் என நினைக்கவே இல்லை. புது ரத்தம் அணிக்குப் பாய்ச்சப் படுவது நல்லதுதான். அடுத்த அரவிந்த என்றுதான் நானும் ஆரம்பத்தில் சாமரவை நினைத்தேன்.
மற்றவர்கள் சொல்லி சொல்லியோ இப்ப கிரிக்கெட் பதிவு மட்டும்தான் வருகிறது.

shan - said...

sanaththum mendisum iniyum anikku thaevaiya ???????????? wait panni paarungal ilaiya ani nichchayam saathikkum annaa..........
( engae innum vaettaikaaran vimarsanaththai kaanavillai ? )

Vijayakanth said...

VETTAIKKARAN PADATHTHA THEATRE LA IRUNTHU THOOKKINA PIRAHU THAN LOSHAN ANNA VIMARSANAM ELUTHUVAR...30 NAATKAL THAANDAATHA VIJAY NU THALAIPPU VAIPPAR :p

Bavan said...

///எப்பூடி?///

சூப்பரு...:)

சங்கக்கார என்னவோ புதுசா எல்லாம் பண்ணுறன் என்று செய்யுறார் பார்க்கலாம்...:)

நன்றி அண்ணா தகவல்களுக்கு..:)

அதுசரி இலங்கையின் உண்மையான உபதலைவர் யார்? (அவரை பெயருக்குத்தான் வச்சிருக்காங்களோ?)

அஸ்பர் said...

y யா? பலிச்சிடப் போகுது.

viththy said...

அதிரடி மன்னருக்கு ஆப்பு வைத்தது கவலை அண்ணா....ஆனால் இலங்கை அணிக்கு இளம் வீரர்கள் வாறது சந்தோசம்.... இந்திய ஒருநாள் தொடரில் மூன்றாவது போட்டிய தவிர மத்த நான்கு போட்டிகளிலும் இலங்கை சார்பாக 5 வீரர்கள் அறிமுகமானவர்கள் இது சாதனையா
அண்ணா??

வந்தியத்தேவன் said...

பொண்டிங்கின் இன்னொரு சாதனை கடந்த 20 வருடங்களில் பலதடவை ஐசிசி விதிகளை மீறியதற்க்கு தண்டிக்கப்பட்டவர். தலைவராக அதிகம் தண்டனை பெற்றவரும் இவரே. ஹிஹிஹி

Anonymous said...

ஆல் ரவ்ண்டர் பர்விஸ் மஹ்ரூப் எங்கே காணவில்லை ?

Unknown said...

அண்ணா எல்லாம் சரி....
சனத், மென்டிஸ், மலிங்க போன்றவர்கள் போட்டிகளில் திறமையை வெளிக்காட்டாமல் கழற்றிவிட்டது சரி, ஆனால் மஹேலவை காயம் காரணமாக கழற்றிவிட்டதாக சொல்வது ஏன்?
மஹேல கடைசியாக நடந்த போட்டிகளில் திறமையாக ஆடி நான் பார்த்தது குறைவு. திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் என்றால் மஹேலவையும் அணியிலிருந்து (ஒருநாள் போட்டிகள்) தூக்க வேண்டுமே?

சாமர கப்புகெதர உண்மையில் பாவம் அண்ணா....
பொதுவாக துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கிடைக்காது... ஒரு 45 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் அல்லது ஆகக்கூடுதலாக 40 ஆவதில் துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கொடுத்தால் எப்படி திறமையை வெளிக்காட்டுவது?
அதே நிலைமை தான் சமரவீரவுக்கும்... வாய்ப்புக் கிடைக்காது, கிடைத்தால் அணி அதிக விக்கெட்டுகு்களை இழந்து தடுமாறும் நிலைமையில் தான் கிடைக்கும்.....
மத்தியவரிசையில் statistics ஐப் பார்க்க முடியாதே அண்ணா?


பொன்டிங்குக்கு வாழ்த்துக்கள்....
உலகம் கண்ட சிறந்த துடுப்பாட்ட வீருர்களுள் ஒருவர்.... இப்போது அணித்தலைமையிலும் சாதனை....

ARV Loshan said...

என்ன செய்வது யோகா.. பழைய சாதனைகளுக்காக தொடர்ந்து நீடிக்க முடியாதே.. எனக்கும் சனத் மேல் பரிதாபம் ஏற்படுகிறது.. ஆனால் அவர் தன பெறுபேறுகளின் உச்சத்தில் இருந்த போதே ஓய்வு பெற்று கௌரவமாக விலகி இருக்கவேண்டும்.

நிஷான் - ஆமாம்.. அனுபவம் குறைந்த அணி.. ஆனால் யார் கண்டார், இந்திய அணியை இந்த இளைய அணி பின்னிப் பெடல் எடுத்தாலும் எடுக்கலாம்..

ARV Loshan said...

சயந்தன் - சும்மா இருந்தாலும் கிளப்பி விட்டிருவீங்க போல.. ஏன்யா?

ARV Loshan said...

தர்ஷன் said...
சனத்துக்கு வாய்ப்பு வழங்கப்படாததில் ஏதோ அரசியல் இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். //
அதை கொஞ்சம் திருத்தி 'அரசியலும்' இருக்கிறது என்று சொன்னால் சரி.. ;)

முரளிக்கும் இனி என்ன நடக்குமோ தெரியாது. //
முரளி சாதிக்கும் வரை அணியில் இடம் நிச்சயம்..
இன்னொரு சேதி தெரியுமோ.. இன்று ஜனாதிபதியினால் இவர்கள் இருவருக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன..
தேர்தல் கால போனஸ்??

அஜந்தா மென்டிஸ் இத்தனை சீக்கிரம் இப்படி ஆவார் என நினைக்கவே இல்லை.//
ஒரு மந்திரப் பந்தை மட்டும் நம்பி இருந்தால் இப்படித் தான்.. பார்க்கலாம் மீண்டும் வர முயல்கிறாரா என்று..


புது ரத்தம் அணிக்குப் பாய்ச்சப் படுவது நல்லதுதான். அடுத்த அரவிந்த என்றுதான் நானும் ஆரம்பத்தில் சாமரவை நினைத்தேன்.//
அப்படித் தான் எல்லாரும் சொன்னார்கள்.. கொஞ்ச நாள் பிரகாசித்து வெளியே போனவர் மறுபடி வருகிறார்.. பார்ப்போம் என்ன செய்கிறார் என்று.

மற்றவர்கள் சொல்லி சொல்லியோ இப்ப கிரிக்கெட் பதிவு மட்டும்தான் வருகிறது.//
மற்றவையும் வரும்.. :)

ARV Loshan said...

ஷான் - நன்றி.. உங்கள் எண்ணம் நிறைவேறினால் எனக்கும் மகிழ்ச்சியே.. :)

விஜயகாந்த் - எப்பிடி இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க? விஜய் மீதும் என் மீதும் அவ்வளவு நம்பிக்கையா? காத்திருங்கள் வரும்

ARV Loshan said...

Bavan said...
///எப்பூடி?///

சூப்பரு...:)//

நன்றி..

சங்கக்கார என்னவோ புதுசா எல்லாம் பண்ணுறன் என்று செய்யுறார் பார்க்கலாம்...:)//
அவர் மட்டுமா? எல்லாரும் தானே.. டில்ஷான் மற்றும் கிரிக்கெட் தேர்வாளர்களை சொன்னேன்


அதுசரி இலங்கையின் உண்மையான உபதலைவர் யார்? (அவரை பெயருக்குத்தான் வச்சிருக்காங்களோ?)//
இல்லை.. அவரே தான்.. இப்போது அவர் இல்லாத படியால் தான் டில்ஷான்.. நீண்ட கால நோக்கோடு யாராவது ஒருவரை (புதிய முகம்) நல்லது.

ARV Loshan said...

அஸ்பர் said...
y யா? பலிச்சிடப் போகுது.//
கொஞ்சக் காலம் நான் சொன்னதெல்லாம் கவுத்துது.. இப்போ தான் பலிக்க ஆரம்பிச்சிருக்கு.. சொல்லித் தான் பார்ப்பமே.. ;)

==================

viththy said...
அதிரடி மன்னருக்கு ஆப்பு வைத்தது கவலை அண்ணா....ஆனால் இலங்கை அணிக்கு இளம் வீரர்கள் வாறது சந்தோசம்.... இந்திய ஒருநாள் தொடரில் மூன்றாவது போட்டிய தவிர மத்த நான்கு போட்டிகளிலும் இலங்கை சார்பாக 5 வீரர்கள் அறிமுகமானவர்கள் இது சாதனையா
அண்ணா??//

இல்லை சகோதரா.. சிம்பாப்வே, இந்தியா, பாகிஸ்தான் எல்லாம் இந்த சாதனைகளை தூக்கி ஏற்கெனவே சாப்பிட்டிருக்காங்க.. ;)

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
பொண்டிங்கின் இன்னொரு சாதனை கடந்த 20 வருடங்களில் பலதடவை ஐசிசி விதிகளை மீறியதற்க்கு தண்டிக்கப்பட்டவர். தலைவராக அதிகம் தண்டனை பெற்றவரும் இவரே. ஹிஹிஹி//

இல்லையே.. வீரராக ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் இவங்க எல்லாம் முன்னிலை பெற்றிருப்பதும், தலைவராக கங்குலி முன்னால் இருப்பதும் மறந்துட்டீங்களா? ;)

=========

Anonymous said...
ஆல் ரவ்ண்டர் பர்விஸ் மஹ்ரூப் எங்கே காணவில்லை ?//
அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள், உபாதைகள் காரணமாக தனது கழகத்துக்கே விளையாடமுடியாமல் இருக்கிறார்

ARV Loshan said...

கனககோபி said...
அண்ணா எல்லாம் சரி....
சனத், மென்டிஸ், மலிங்க போன்றவர்கள் போட்டிகளில் திறமையை வெளிக்காட்டாமல் கழற்றிவிட்டது சரி, ஆனால் மஹேலவை காயம் காரணமாக கழற்றிவிட்டதாக சொல்வது ஏன்?
மஹேல கடைசியாக நடந்த போட்டிகளில் திறமையாக ஆடி நான் பார்த்தது குறைவு. திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் என்றால் மஹேலவையும் அணியிலிருந்து (ஒருநாள் போட்டிகள்) தூக்க வேண்டுமே?//
டெஸ்ட் போட்டிகளிலும், இந்தத் தொடருக்கு முன்பாகவும் மகெல பெற்ற ஓட்டங்களை மறப்பதற்கு தேர்வாளர்கள் என்ன கங்கோனா? ;) இந்த வருடத்தில் மகேள 669 ஓட்டங்களும், ஒரு சதம்+3 அரை சதமும் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஹசியையோ, இந்திய அணியிலிருந்து யுவராஜையோ அவ்வளவு இலகுவாகக் கழற்றிவிட முடியுமா?

சாமர கப்புகெதர உண்மையில் பாவம் அண்ணா....
பொதுவாக துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கிடைக்காது... ஒரு 45 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் அல்லது ஆகக்கூடுதலாக 40 ஆவதில் துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கொடுத்தால் எப்படி திறமையை வெளிக்காட்டுவது?
அதே நிலைமை தான் சமரவீரவுக்கும்... வாய்ப்புக் கிடைக்காது, கிடைத்தால் அணி அதிக விக்கெட்டுகு்களை இழந்து தடுமாறும் நிலைமையில் தான் கிடைக்கும்.....
மத்தியவரிசையில் statistics ஐப் பார்க்க முடியாதே அண்ணா?//
ம்ம்.. நீங்கள் சொல்வது சரியாகவே இருந்தாலும் , சமரவீரவுக்கு அது சரி.. ஆனால் கபுவுக்கு இரு நல்ல வாய்ப்புக்கள் நடந்துமுடிந்த தொடரில் கிடைத்தன.. நின்று நீண்ட இன்னிங்க்ஸ் விளையாடாமல் ஆட்டமிழந்தது அவர் தவறு..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner