February 06, 2010

ஆயிரத்தில் ஒருவன் - ஆழமாக ஒரு அலசல்




படம் வெளிவந்து மிகத் தாமதமாக விமர்சனம் வழங்குவது எனக்கொன்றும் புதிதல்ல என்பதானாலும், இது பற்றி எழுதியே ஆகவேண்டும் என்பதனாலும் ஆயிரத்தில் ஒருவன் பற்றி எனது பார்வையை கொஞ்சம் ஓய்வு கிடைத்த இன்று பதிகிறேன்.

ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் வெளிவந்த போதே, அது மனதில் ஏற்படுத்திய பல எதிர்பார்ப்புக்கள் பற்றி ஒரு பதிவிட்டிருந்தேன்.

எந்த ஒரு விமர்சனமும் வாசிக்காமல்,படம் பார்த்த யாரொருவரின் கருத்தும் கேட்காமல் படம் பார்க்க செல்லும் எனது வழக்கத்தை இந்தப் படத்திற்கும் தொடர்ந்தது நல்லதாவே போயிற்று.இல்லாவிடில் வேறொருவரின் பார்வை கொஞ்சமாவது தாக்கம் செலுத்தியிருக்கும்.

அநேகர் பார்த்திருப்பீர்கள் என்பதனால் பார்த்தவர்கள் படித்தால் அதிகளவில் புரியும் விதத்திலேயே எனது இந்தப் பதிவு.

தமிழில் ஒரு வித்தியாசமான முயற்சி எனப் பட வேலைகள் தொடங்கும்போதும், பாடல்கள் வெளியிடப்பட்ட போதும் சொன்னதை படம் வெளிவந்து நிரூபித்திருக்கிறது.

சோழர் காலத்தில் ஆரம்பித்து கதை நிகழ்காலத்திலும் பயணித்து சோழரையும் நிகழ்காலத்தையும் சங்கமித்து முடிக்கிறது.

இப்படியான கனவு,கற்பனைத் தன்மையான படங்கள் தமிழில் வருவதில்லையே என்ற எனது ஏக்கத்தை கந்தசாமி விமர்சனத்தின் போது சொல்லி இருந்தேன். செல்வராகவன் படைத்து தமிழில் இன்னொரு புதுவழி காட்டி இருக்கிறார்.
இதை கண்ட லொஜிக்,லொட்டை,லொசுக்கு சொல்லாமல் சிறு குறைகளைப் பொருட்படுத்தாமல் இது போன்ற இனி வரும் படங்களுக்கு வரவேற்பை நாம் அளிக்கவேண்டும்.

எனினும் மிகப் பெரிய நிதித் தொகையுடன் எடுக்கப்பட்ட படம் என்பதை அறிந்தும் நீண்ட நாட்கள் எடுத்த படப்பிடிப்பும்,கடைசி நேர அவசரமும் சில கிராபிக்ஸ் காட்சிகளின் சொதப்பலில் தெரிகிறது.
பல இடங்களில் செல்வராகவன் குழுவினர் காட்டிய சிரத்தை,நேர்த்தி சில இடங்களின் ஓட்டைகளால் அடிபட்டு விட்டிருக்கிறது.


படத்தில் என்னை மிக லயிக்க செய்த,ஆச்சரியப்படுத்திய இருவர் ஒளிப்பதிவாளர் ராம்ஜியும், கலை இயக்குனரும் தான்.செல்வா கற்பனையில் கொண்டுவந்த பிரமாண்டம்+பிரமிப்பை எமக்குள் ஏற்படுத்துவோர் அவர்கள் தான்.

மூன்று ஆண்டுகள் ஏன் எடுத்தது என்ற கேள்விக்கு எம்மால் பதில் சொல்ல முடியாது எனினும், படம் சொல்கின்ற சில வரலாற்றுப் பின்னணிகள், இறுதிக் கட்டத்திலே உருவகமாக உணர்த்தப்படுகின்ற சில விஷயங்கள் பற்றிய தகவல் திரட்டுக்கள், சோழர் கால மொழிவழக்கு போன்ற தேடலுக்கு இத்தனை நாட்கள் முன்பே எடுக்கப்பட்டிருந்தால் தகும் எனவே தோன்றுகின்றது.

சோழர் காலத் தமிழும், அந்த மொழி உச்சரிப்புக்களும், கொற்கை அருங்காட்சியகம் காப்பாளராக (curator) இருந்து ஓய்வு பெற்றவரும், பேராசிரியர்.நா.வானமாமலையின் 'ஆராய்ச்சி' குழுவில் முக்கிய உறுப்பினருமான ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரனின் பின்னணி உழைப்பின் பலன் என அறிந்தேன்.

சோழரின் சில நடத்தைகள், அவர்கள் காட்டப்படும் விதம் குறித்து சொல்லப்படும் கருத்துக்கள் பற்றிப் பின்னர் வருகிறேன்..

நடிக,நடிகையர் பற்றி...

படத்தின் ஹீரோவாக பெயரிடப்பட்டுள்ள கார்த்தி, தனக்கு வழங்கப்பட்ட சில இடங்களில் சிக்சர் அடிக்கிறார்.கையில் MGR என்ற பச்சை ஒருபக்கம்.. முதல் காட்சியிலேயே அதோ அந்தப் பறவை பாடலுக்கு MGR பாணியில் ஒரு கலக்கல் நடனம் என்று அசத்தலாக ஆரம்பிப்பவர், தொடர்ந்து வரும் ஒரு சில காட்சிகளில் ஜொலித்தாலும் பிரதான பாத்திரம் என்ற பெருமை ரீமாவுக்கு சென்று விடுகிறது.

இரண்டு பேரிடமும் வழிவதும்,பரிதாபமாக சில இடங்களில் தெரிவதும், கடைசிக் கட்ட ஹீரோயிசக் காட்சிகளும் கார்த்தியைக் காட்டினாலும், அந்தத் தாடியும் முரட்டுத் தோற்றமும் பருத்திவீரனையே கண் முன் கொண்டு வருகிறது.

ரீமா சென்.. இவர் தான் படத்தின் அச்சாணி. தமிழில் ஒரு LARA CROFT மாதிரி கம்பீரமாக, பல நேரங்களில் பயமுறுத்தும் கவர்ச்சியோடு வலம் வருகிறார்.

கச்சிதமான தெரிவு.கண்ணில் கொஞ்சம் கோபம்,கொஞ்சம் வெறி,கொஞ்சம் காமம் என அதகளப்படுத்துகிறார்.
சோழ மன்னனைக் கவிழ்க்க ஆடும் காம ஆட்டம் இருக்கிறதே.. அப்பப்பா.. என்ன ஒரு துடிப்பு.உடல் முழுவதும் நடிக்கிறது.வனமும்,காமும் இணைந்து அவர் காட்டும் பாவங்கள் சரசத்தின் பட்டப்படிப்புகள்.

சண்டைக் காட்சிகளிலும் அவரது உடல்வாகு கை கொடுக்கிறது.கண்கள் இவருக்கு சாதாரணமாகவே வில்லத் தனமானது.இதிலே கை கொடுக்கிறது.
அண்ட்ரியா பற்றி விசேடமாக சொல்ல ஏதுமில்லை. சோழத் தமிழ் பாசுரங்களை வைத்து வழி சொல்கிறார்.அழகாக பல இடங்களில் சோ ஸ்வீட் என்று கிள்ளும் ஆசை வரும் அளவுக்கு அழகாக இருக்கிறார். செல்வா - சோனியா எப்படிப் பிரிந்தார்கள் என்று இவரை சில ஆடைகளில் பார்த்தால் தெரிகிறது.

பார்த்திபன் - சோழ மன்னனாக கம்பீரமாக இருக்கிறார்.சில இடங்களில் அருவருக்கவும் வைக்கிறார்.நடனமாடும் இடங்கள் எங்களை சோதிக்கின்றன.கண்களால் பேசும் இடங்களும்,அழுத்தமான தமிழ் உச்சரிப்பும் அருமை.

கம்பீரமும், கண்கள் பேசும்,உடலசைவு காட்டும் பாவனைகளும் லயிக்கவைக்கின்றன.கடைசிக் காட்சிகளில் இந்த அம்சங்களால் அனைவரையும் பின் தள்ளி முக்கிய பாத்திரமாகிறார் பார்த்திபன்.
இறுதிக்காட்சியில் "முன்னமே சொன்னால் பயந்திடுவோம் என நினைத்தனையோ" என்று கேட்கும் இடத்திலும், உயிரை விடும் இடத்திலும் எம்மையும் உருக வைக்கிறார்.

இவர்களைவிட அழகம்பெருமாள் மட்டுமே குறிப்பிடத்தக்க மற்றும் ஒரு பாத்திரம்.பிரதான பாத்திரங்களே முழுக்க முழுக்க கதையுடன் பயணிப்பதும்,சோழர் வாழும் கற் குகையும்,அவர்கள் வாழ்க்கை அவலங்களும் இன்னும் பாத்திரங்களாவதும் செல்வாவின் இயக்குனர் முத்திரை.


படத்தை உயிடோட்டமாக்குகின்ற இன்னொரு அம்சம் ஜி.வீ.பிரகாஷின் இசை..மூன்று பாடல்கள் மட்டும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது படத்தை செறிவாக்குகிறது.
அதிலும் தாய் தின்ற மண்ணே, எப்படி எடுப்பார்கள் என நினைத்தேனோ அப்படியே படமாகியிருக்கிறது.. படத்தில் உணர்ச்சியை ஊற்றும் இடம் அது.

பின்னணி இசையிலும் பின்னி எடுத்திருக்கிறார் ஜி.வீ.பயணத்தில் எம்மையும் அழைத்து செல்கிறது இசை.தேவையான இடங்களில் தேவையான இசைக்கருவிகளின் ஓசைகள் சூழ்நிலையை உணர்த்தும் குறிகாட்டிகள்.
சோழர் வருமிடமேல்லாம் மெல்லிய சோக யாழும்,யுத்தத்தினதும்,அவலத்தினதும் சோகத்தைக் காட்ட பறை என்று இசை படத்தின் உயிர்நாடி.
பெம்மானே பாடல் முழுமையாக இல்லாமல், போய் வா ஏந்தலே வரிகள் மட்டும் வரும் இடம் மனதைப் பிசைகிறது.

யுவன் கூட இவ்வளவு நன்றாக இந்தப் படத்தைப் புரிந்து இசையமைத்திருப்பாரா என்பது சந்தேகம் தான்.

சில இடங்களில் குழப்பத்தையும் எரிச்சலையும் தந்தவை..
அண்ட்ரியா ஓலை சுவடிகளை வாசிக்கும் நேரத்தில் அந்த வாசகங்கள் காதில் தெளிவாக விளங்க விடாமல் இரைச்சல்..
சோழ மக்கள் வாழும் இடத்திலும் குகை சூழல் என்று காட்டுவதற்கோ என்னவோ சில பல வசனங்கள் தெளிவாகக் கேட்க முடியாமல் உள்ளது.
ஏற்கெனவே சோழர்காலத் தமிழ் பாதி புரியாத நிலையில் இது வேறா?

குறைகள் தவிர்ப்போம் என நினைத்தாலும், பல இடங்களில் இரட்டை அர்த்தம் எல்லாம் இல்லாத நேரடி பாலியல் சம்பாஷனைகள்,கொடூரமான வன்முறைகள் என்பன தணிக்கையில் அகப்படாமல் தப்பியது பெரும் ஆச்சரியமே.
இந்த ரத்தம் தெறிக்கும் வன்முறைகள் கொஞ்சமாவது குறைந்திருந்தால் குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் அளவுக்கு ஆயிரத்தில் ஒருவன் ஓடி இருப்பான்.

ஆங்கிலப் படங்கள் பலவற்றிலிருந்து ஏராளமான ஐடியாக்களை சுட்டுப் பயன்படுத்தி இருக்கிறார் செல்வா.
Apocalypto, Mummy returns,300.. இப்படி பல.. ஆனாலும் அவற்றில் கிராபிக்ஸ் நேர்த்தி இருந்திருக்குமானால் விமர்சிக்கப்பட்டிருக்கா..

படத்தின் முதல் பாதியில் விறுவிறுப்பு இருந்தாலும் இந்தக் குறைகள் இடைவேளைக்கு முன் தான் அதிகம் இருக்கின்றன.இடைவேளை விடப்படும் இடம் உண்மையில் எம்மைப் பைத்தியமாக்கும் இடம் தான்.
அதன் பின் கார்த்தி,ரீமா,அன்றியா சோழர் வாழும் இடம் சென்ற பிறகு தான் என்னைப் பொறுத்தவரை சூடு பிடிக்கிறது.

லொஜிக் மீறல்கள் இப்படியான படங்களில் ஏற்றுக் கொள்ளப்படவேண்டியவை என்பதால் நான் அதுபற்றி அக்கறை கொள்ளமாட்டேன். சாரு போன்ற சகலமும் அறிந்தவர்களே இதில் முட்டையில் மயிர் பிடுங்குவது ஆச்சரியமே..

பாண்டிய-சோழப் பகையை இவ்வளவு கோரமாகவும்,பழிவாங்கும் உணர்வை இத்தனை மோசமாகவும் காட்டி இருக்கக்கூடாது என்று எல்லோர் போல நான் யோசித்தாலும், தமிழர்களின் வரலாறு அப்படி சொல்லுதில்லையே.. தமக்குள்ள எப்பொதும் மோதிக்கொண்டும், ஒருவரை ஒருவர் எந்த விதத்தில் மோசமாக அழிக்கலாம் என்பதிலுமே வரலாறுகள் சென்றுள்ளதே.. பரிதாபம் இன்னமும் எம்மினம் திருந்தவில்லை.

படத்தின் கடைசிக் கட்டங்களின் விஷயங்கள்,விளக்கங்களுக்கு வருகிறேன்..

ஈழப்போரின் கடைசிக் கட்டங்களில் நடந்த அவலங்களைத் தான் இயக்குனர் சோழர்கள் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் நடக்கும் அழிவுகளும் அழிப்புக்களும் காட்டப்படுவதாக ஒரு சாரார் சொல்லிவருகின்றனர்.
எனினும் இயக்குனர் செல்வராகவன் ஒரு பேட்டியில் ஈழப்போரின் இறுதிக்கட்டத்துக்கு முன்னதாகவே தான் இந்தக் காட்சிகளை எடுத்து முடித்துவிட்டதாகக் கூறியதை ஆதாரமாக வைத்துக் கொண்டு இல்லை இது தற்செயல் தான்.இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என்று இன்னும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

செல்வராகவன் பொய் சொல்கிறார் எனபதை விட சிக்கல்,சர்ச்சைகளை தவிர்த்துக்கொள்ள விரும்புகிறார் என்ற கோணத்தில் நோக்கலாமே..

எனினும் ஆழமாகவும்,அனுபவ ரீதியாகவும் பார்த்தால்...
இதை ஒருவகை உருவக,எடுத்துக்காட்டு விமர்சனப் படமாக்கலாகவே நான் காண்கிறேன்.

புலிக்கொடி உடைய சோழர்கள் இலங்கையின் வடபால் தமிழராகக் காட்டப்பட்டால்.. மன்னர் யார் என்ற கேள்விக்கு இடமில்லை.
சோழர்கள் குகையில் அவலவாழ்வு வாழ்வது,மன்னரைப் பலர் விமர்சிக்கவும்,அவருடன் மோதிக்கொள்ளவும் முனைவது,தங்கள் பஞ்சம்,வறுமை பற்றி மன்னர் அறியாதுள்ளாரே எனப் புலம்புவது எல்லாம் உள்ளக விமர்சனங்கள்.
கடைசிக்கால ஈழப் போர் பற்றி எழுந்த விமர்சனங்கள் அனைவரும் அறிந்தவையே..

ரத்தம்,பலி,சித்திரவதைகள்,எதிரிகள்,ஒற்றர்கள் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்படல்,சொந்த மக்கள் காட்டும் பயத்துடன் கூடிய மரியாதை,க்ளாடியேட்டர் பாணியிலான வீர விளையாட்டுடன் கூடிய வதை என்று குரூரமாக காட்டப்படும் அனைத்துமே ஒருவிதமான மாற்றுக்கருத்துடனான உருவக விமர்சனங்கள் என்றே எடுத்துக் கொள்ளவேண்டியதாயுள்ளது.

அது சோழர்களுக்கு என எடுத்துக் கொண்டாலும் சரி, ஈழப்பக்கம் என்றாலும் சரி,அடக்குமுறைகளுக்குள்ளான,ஒடுங்கிவாழும் ஒரு சமூகத்தின் வன்மம் கலந்த குரூர உணர்வுகள் என எடுத்துக்கொள்ளவேண்டியது தான்.

ராஜகுரு நோய்வாய்ப்பட்ட பின்னர் மன்னர் ஏமாந்துபோவது
சோழ மக்கள் விரைவில் தஞ்சை புறப்படுவதாக மன்னர் அறிவிக்கும் நேரத்தில், 'இத்தனை நாளாக என்னைப் பார்த்து நீங்களும்,உங்களைப் பார்த்து நானும் மிரண்டு கிடந்த காலம் போகட்டும்' என்னும் இடம்,
யுத்தத்தில் பாரம்பரிய முறையில் சோழர்களும், இந்தியப் படை துப்பாக்கிகள்,குண்டுகளோடு மோதுவதும்..
நீரில் விஷம் கலந்து சோழர்களை சாகடிப்பது.. (விஷ வாயு தாக்குதலை யாரும் மறந்திருக்க மாட்டோம் தானே)
படத்தில் வரும் இந்தியபடைகள் தாக்குதலுக்கு முன்பதாக ஆகாய மார்க்கமாக 'இந்தியாவிலிருந்து' மேலதிக துருப்புக்களை அழைப்பது..

இந்த இடங்கள் மூலமாக இயக்குனர் காட்டுவது என்ன?

சோழர் படை தோற்கடிக்கப்பட்டு மன்னர்,தூதுவனாக மாறிப்போன கார்த்தி, சோழ மக்கள்,பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அடிமைகளாக்கப்பட்டு துன்புறுத்தப்படும் இடத்தைப் பாருங்கள்.. இட அமைப்பு..
ஆறு,கடல்,தீவு சேர்ந்தது போன்ற ஒரு நில அமைப்பு..

முள்ளிவாய்க்கால்,நந்திக்கடல் ஞாபகம் யாருக்கும் வருமே..

பாலியல் வன்முறைகள்,கொத்துக் கொத்தாய் உயிர்ப்பலி நிகழ்தல்..
சோழ மன்னன்/தலைவன் அடித்துக் கொள்ளப்படும் இடத்தில் கூட,அவன் கடல் பக்கமாக நகர்ந்து சென்று மரிக்கும் அந்தக் கணங்கள்..கடலிலே தங்களை ஏற்றிக் செல்ல வரும் கப்பல்கள் அவன் மனக்கண்ணில் விரிகின்றன.. நம்ப வைக்கப்பட்டு எமாற்றப்பட்டோமே என்ற வலியுடன்,இயலாமையுடன் அவன் வீழ்ந்து மடிகின்றான்..

அப்போதும் அவன் தலையிலும்,கண்ணுக்கு மேலே நெற்றியிலும் இரத்தக் காயங்கள்.. ஏதோ ஒரு ஞாபகம் உங்களில் ஒரு சிலருக்காவது வரவில்லையா?

எனக்கு மிக வலித்தது..

இடைவேளைக்குப் பிறகு கையில் வைத்திருந்த மிக்சர்,கொரிப்பான்கள் கூட உண்ண முடியாமல் அருகில் வைத்துவிட்டேன்..

இறந்த தங்கள் மன்னன் உடல் தாங்கி வீரர்கள் அணியணியாய் நீருக்குள்ளே இறங்கும்போது பின்னணியில் ஒலிக்கும் பெம்மானே பாடலின் "போய் வா ஏந்தலே" வரிகள் ஓலமாய் நெஞ்சுக்குள்ளே இன்னும் எதிரொலிக்கின்றன..

மன்னன் மகன் ஒருவனும், தூதுவனாய் வந்தவனும் அல்லது தளபதி எனக் கருதப்படக் கூடியவனும் மட்டும் தப்புவதாக இயக்குனர் காட்டுவது நம்பிக்கைக்கான ஒரு தூண்டுதாலா?
சோழன் பயணம் தொடரும் என்பது பலரின் மனதில் இன்னும் இருக்கும் விழுந்துவிடா நம்பிக்கை.அதை ஏமாற்றிவிடாமல் இருக்க செல்வா முனைந்துள்ளாரா?
மன்னன் முடிந்தாலும் மண்ணுக்கான தேடல் முடியா என்பதா அவர் சொல்லும் கருத்து?


இது உண்மையிலேயே ஈழத்துப் போரின் மீதான இயக்குனரின் வாசிப்பாக இருக்குமேயானால்,அவர் இத்தனை விஷயங்களை ஆழமாகப் பார்க்க அவருடன் இணைந்து பணியாற்றிய ஒருவரோ சிலரோ இந்த விஷயங்களில் ஆழ்ந்த அனுபவம்,அறிவு உடையவராக இருந்திருக்க வேண்டும்.

இயக்குனர் இதை வர்த்தக நோக்கோடு கபடமாக அணுகவில்லை.அப்படி அவர் விரும்பியிருந்தால் முழு மசாலாக் குப்பையாக்கி,மன்னரைக் கூட உயிரோடு தப்ப விட்டோ,சோழ நாட்டை வென்றெடுத்து புலிக்கொடி பறக்கிறது எனக் காட்டி உசுப்பேற்றி இருக்கலாம்.
எனவே செல்வராகவனின் நேர்மை பிடித்திருக்கிறது.

செல்வராகவனின் இந்த ஆயிரத்தில் ஒருவன் ஒரு புதிய முயற்சிக்கான ஒரு சில முதல் அடிகளில் ஒன்று.இதை கொஞ்சமாவது நாம் ஊக்குவித்தாலே அடுத்தகட்ட நல்ல முயற்சிகள் வெளிவரும்.
தயாரிப்பாளர்களும் ஒரே மாதிரியான கலவைக்குள் கிடந்தது உழலாமல் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க முன்வருவர்.

குறைகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து நிறைகளை நிறைவாகப் பார்க்குமிடத்தில் எனக்கு ஆயிரத்தில் ஒருவன் சொல்லவந்த விடயம் பிடித்திருக்கிறது.

புதுப்பேட்டைக்கு அடுத்தபடியாக செல்வராகவனை ஓரளவாவது இயக்குனராக வியந்தேன்.


48 comments:

suthan said...

nice.

இரா பிரஜீவ் said...

ஆழமான அலசல் எண்டு கொஞ்சம் ஆழமாகவே தோண்டி போட்டியள். உங்கட நாட்டு நிலவரம் இப்ப எப்படி?

"பாலியல் வன்முறைகள்,கொத்துக் கொத்தாய் உயிர்ப்பலி நிகழ்தல்."

"சோழர் படை தோற்கடிக்கப்பட்டு மன்னர்,தூதுவானாக மாறிப்போன கார்த்தி, சோழ மக்கள்,பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அடிமைகளாக்கப்பட்டு துன்புறுத்தப்படும் இடத்தைப் பாருங்கள்.. இட அமைப்பு..
ஆறு,கடல்,தீவு சேர்ந்தது போன்ற ஒரு நில அமைப்பு..

முள்ளிவாய்க்கால்,நந்திக்கடல் ஞாபகம் யாருக்கும் வருமே..:"

தங்கள் நாட்டில் அப்படி ஏதுமே நடைபெறவில்லை என்ற அரச ஆணையை தாங்கள் உரசும் போது பழைய நினைவுகள் தவிர்க்க முடியவில்லை

Vijayakanth said...

எங்கே நீங்களும் இதற்கு எதிர்மறை விமர்சனம் கொடுத்துவிடுவீர்களோ என நினைத்தேன்......இவ்வாறான முயற்சிகளை வரவேற்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்திலாவது குறைகளை மறந்து இதனை வர்த்தக ரீதியில் வெற்றிபெற செய்யவேண்டும். அப்போதுதான் தரமான சினிமாக்களை இதுபோன்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியும்...
கதையை பிடிக்காதவர்கள் தான் புரியவில்லை என்னும் கருத்தை முன்வைக்கிறார்கள்....O/L தமிழ் ஆனந்தன் சார் கிட்ட பாட்டுக்கு பொருள் படிச்சதால இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் வசதியா இருந்துச்சு....நான் படிச்சது இப்போ தான் எனக்கு பயன்பட்டிருக்கு...!
Avatar, Harry potter போன்ற படங்களை விமர்சனமின்றி பார்ப்பவர்களுக்கு தமிழில் வந்த படங்களை வரவேற்க தோன்றுவதில்லை என்பது எனது கவலை......விஜய் பறப்பதை ரசிக்கத்தெரிந்தவர்களுக்கு இப்படத்தில் லாஜிக் தெரிவது தான் ஆச்சர்யம்....

இப்படத்தை ஈழத்தோடு ஒப்பிடுவது பாடல்கள் வெளியானபோதிலிருந்தே நடைபெற்றதுதான். எனினும் இப்படி இவ்வளவு ஒன்றிப்போகும் என எதிர்பார்க்கவில்லை.....உங்கள் இன்றைய பதிவினை அரசு கவனிக்குமாயின் இத்திரைப்படம் இலங்கையில் திரையிட தடைவிதிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை...!
சோழன் பயணம் தொடரும் என நம்புவோம்...!

Anonymous said...

/மூன்று ஆண்டுகள் ஏன் எடுத்தது என்ற கேள்விக்கு எம்மால் பதில் சொல்ல முடியாது/

சோழர்களின் வரலாற்றோடு பின்னிய ஒரு கதைக்குச் சரியான முடிவைக் கொடுக்கும் நோக்கில், முடிவு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளத்தான் செல்வா தாமதித்தாரோ?

- நாதன்

ஜனகன் said...

வணக்கம் அண்ணா.
நான் ஜனகன். தற்பொழுது USA இல் உள்ளேன்.
தங்களுடைய இந்தப்பதிவு "ஆயிரத்தில் ஒருவன்" பார்க்கவேண்டும் என்ற ஆவலை என்னுள் தூண்டியுள்ளது.
ஆனால் நான் வசிக்கும் இடத்தில் தமிழர்களோ, தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளோ இல்லை.
நான் இத்திரைப்படத்தை பார்ப்பதற்கு ஏதாவது வழி உள்ளதா?
இருந்தால் தயவுசெய்து அறிவிக்கவும்.

நன்றி.

root said...

வாழ்த்துக்கள் சிறப்பான அலசல்... படம் 3 முறை பார்த்தும் கண்ணீர் வந்திச்சு... உங்கள் விமர்சனம் வாசித்தும்...... but சோழரை இப்படிக்காட்ட வேண்டிய அவசியம் என்ன? சரி நீங்கள் சொன்னது மாதிரி //குறைகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து நிறைகளை நிறைவாகப் பார்க்குமிடத்தில் எனக்கு ஆயிரத்தில் ஒருவன் சொல்லவந்த விடயம் பிடித்திருக்கிற//

Sayanolipavan said...

tharamaana vimarsanam.
ithaithan ethirparthirunthen...

குறைகள் தவிர்ப்போம் என நினைத்தாலும், பல இடங்களில் இரட்டை அர்த்தம் எல்லாம் இல்லாத நேரடி பாலியல் சம்பாஷனைகள்
இந்த ரத்தம் தெறிக்கும் வன்முறைகள் கொஞ்சமாவது குறைந்திருந்தால் குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் அளவுக்கு ஆயிரத்தில் ஒருவன் ஓடி இருப்பான்

Sayanolipavan said...

Tamil Padam விமர்சனம் எப்போ வரும் ?..
எதிர்பார்ப்புடன் இருக்கோம்

Subankan said...

பார்க்கும்போதே வலித்தது அண்ணா, உங்கள் எழுத்தில் படிக்கும்போது இன்னும் அதிகமாக

Unknown said...

ஆயிரம் சினிமாக்களில் ஒருவன் - ஆயிரத்தில் ஒருவன்

என்.கே.அஷோக்பரன் said...

நல்ல படம். நல்ல விமர்சனம்.!

கன்கொன் || Kangon said...

புதிய முயற்சி என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்றாலும் எனக்கு படம் ஒட்டிக் கொள்ளவில்லை.

adventure வகைப் படங்கள் பார்க்க நன்றாக இருக்கும் என்றாலும் எதிர்பார்ப்புகள் அதிகம் என்பதாலோ என்னவோ எனக்கு லொஜிக் ஓட்டைகள் இடித்தன.
அத்தோடு தேவையற்று சில அம்சங்களைப் புகுத்தியது போல் தோனறியது.

ஒற்றை அர்த்த (இது இரட்டை அர்த்தமில்ல) வசனங்களையும் தவிர்த்திருக்கலாம்.

இரசனை வேறுபாடு... ம்... :)

KANA VARO said...

அடடே நான் இன்னும் பார்கலையே! சி.டி ல பார்க்க விருப்பமில்லை. எங்கையாவது புது ரீல்ஸ் கிடைக்காட்டி திருப்ப போடுவங்கள் பார்ப்பம்.

BR said...

ஆயிரத்தில் ஒரு(நல்ல) விமர்சனம்.!

maruthamooran said...

லோஷன்,

‘ஆயிரத்தில் ஒருவன்’ குறித்த தங்களின் இந்த விமர்சனக் கட்டுரை (எவ்வளவு நீளம் ஐயா) தங்களின் மனத்திலுள்ள வடுக்களையும் எண்ணவோட்டத்தினையும் சரியாக சொல்லியிருப்பதாக உணர்கிறேன். படத்தினை இன்னமும் பார்க்கவில்லை. தற்போதைக்கு பார்க்கவும் பெரிதாக நேரம் இல்லை. அவ்வளவு ஆணி அடித்தல்கள் வரிசையாக இருக்கின்றன.

ஆனால், இந்தப் படத்தினை தனித்திருந்து பொறுமையாக பார்ப்பதற்கு தீர்மானித்திருக்கிறேன். அதற்கு தங்களின் இந்த விமர்சனமும் ஒரு காரணம்.

இயக்குனர் செல்வராகவன் குறித்து எனக்கு 60 வீதமான நம்பிக்கையுண்டு. அது, அவரின் வெற்றிப்படங்கள் வந்தபோது பலராலும் அளவுக்கதிகமாக புகழப்பட்ட போதும் சரி, புதுப்பேட்டை (இந்த படத்தின் மையக்கருத்துள்ள ஆசியப் படமொன்றை பார்த்ததாக எனக்கு ஞாபம்.) என்கிற படம் தோற்றபோதும் சரி. அவரின் மீது நம்பிக்கையிருந்தது.

ஆயிரத்தில் ஒருவன் மீது மறை விமர்சனங்கள் அல்லது அளவுக்கு அதிகமாக யதார்த்த மீறல்கள், கதை ஓட்டம், ஆபாசம் என்ற கோணங்களில் விமர்சனங்கள் அதிகளவில் வருகிறன. வாசிக்கிறேன். அதுவும், சாருவின் விமர்சனமும் வாசித்து ஆச்சரியப்பட்டேன். (கோவா படத்தினை நல்ல படமென்று கூறியிருக்கிறார் அவர்).

தமிழர்களுக்கு என்று அற்புதமான (அற்பமான) இரண்டு குணங்கள் உண்டு. ஒருவர் மீது இலவுகாக அரசியல், அமைப்பு அல்லது மத சாயம் பூசுவது முதவாவது. இரண்டாவது ஒரு விடயத்தை அளவுக்கு அதிகமாக புகழ்வது அல்லது முற்றுமுழுதாக நிராகரிப்பது. இந்த இரண்டு குணங்களையும் நாம் திருத்திக்கொண்டால் பல விடயங்கள் சரியாக நடக்கும். தற்போது, ஆயிரத்தில் ஒருவனிலும் அதுவே நடப்பதாக எனக்கு படுகிறது.

என்.கே.அஷோக்பரன் said...

உங்கள் விமர்சனம் சிறப்பு.

இந்தப் படத்தைப் புரிந்துகொள்ள கொஞ்ச முதிர்ச்சி அவசியம். காமம் என்பதைக் குறையாக இந்தப் படத்தில் சொல்கிறார்கள் - எத்தனையோ ஆங்கில, ஹிந்திப் படங்களோடு பார்க்கையில் இதெல்லாம் ஒன்றுமில்லை என்பது வெளிப்படையாகத் தெரியும்.

இந்த வகைப் புதுமுயற்சிகள் தமிழில் தொடர வேண்டும். எத்தனை காலம் தான் ஒரே மாதிரிப் படங்களை “பன்றி”, “குதிரை”, “அம்பு” எண்டு வேற வேற பெயரில பார்க்கிறது? ;-)

மதார் said...

see here

http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/01/blog-post_29.html

Anonymous said...

தங்கள் திரைப்படம் பற்றிய கருத்து ஆழமா ? பாம்பென்று நினைத்தால் பாம்பு கயிறென்று நினைத்தால் கயிறு.அவதார் பார்த்தாலும் வாழ்விடம் இழந்து ஓடினவனுக்கு அழுகை வரும்.

இங்கே நீங்கள் எழுதியிருப்பது உங்கள் மனத்தின் பிரதிபலிப்பு.
படத்தைப்பற்றியதல்லாமல் உங்களுடைய உமது நாட்டு நிகழ்வுகள் பற்றிய தனிப்பட்ட அபிப்பிராயங்கள்
காட்சிகளோடு பொருத்திபார்க்கிறீர்கள்.
இதுதான் செல்வாவுக்கு வெற்றி.

பொருந்தாத பல காட்சிகளையும், யுத்தங்களின் அவலங்கள் எப்போதும் ஒரே மாதிரியானவை என்பதனையும் கருத்திலெடுக்கவில்லை.
உங்கள் மனத்தின் பலவீனமான் இடுக்கில் இந்த திரைப்படம் மாட்டியிருக்கிறது.

தர்ஷன் said...

ஆஹா நல்லப் படியாய் விமர்சனம் எழுதி நொந்திருந்த மனதை ஆறுதல் படுத்தியிருக்கிறீர்கள். எனக்கும் படம் ரொம்பப் பிடித்தது.
ஒரு விறு விறுப்பான Adventure படத்தை எதிர்பார்த்து செல்பவர்களுக்கு சீரற்ற,மெதுவாக செல்லும், தெளிவு குறைந்த திரைக்கதை குழப்பம் ஏற்படுத்தி இருக்கலாம். கூடவே சோழர் தமிழும்.
நான் படம் பார்க்க சென்றிருந்த போது ஒரு குடும்பம் தம் குழந்தைகளோடு வந்து சங்கடப்பட்டு நெளிந்து கொண்டிருந்தனர். செல்வாதான் ஏற்கனவே மூன்று படம் எடுத்து விட்டாரே. இதெல்லாம் இருக்கும் என்று தெரியாதா? படம் வல்கராக இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். படத்தின் பாத்திரங்களின் இயல்புகளாக சொல்லப்படுபவற்றின் வெளிப்பாடே அது.பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்பவர் ஊரில் தனியாக வாழும் துடுக்குத் தனமான இளம்பெண்ணின் தொப்புளில் பம்பரம் இடுகிறார் என்பதை விடவா இது ஆபாசம்.
வன்முறை கொஞ்சம் அதிகம்தான். அதிலும் இரும்புக்குண்டு காட்சி எப்போது முடியும் எனத் தோன்றியது.
சாரு வயதாகவில்லை என்று சொன்னாலும் அவருக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. கலகக்காரன் கால இயந்திரத்தில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். நித்யானந்தருடன் உறவின் பின் இந்தியத் தேசியம், பண்டைய தமிழர் பெருமை, பாலியல் தொடர்பிலான மரபு சார் கட்டுப்பாடுகள் போன்றவற்றை எல்லாம் போற்றத் தலைப்பட்டிருக்கிறார்.

Nimalesh said...

this is the one of best Tamil Flim with lot of Diffrence for sure..

Anonymous said...

//அவதார் பார்த்தாலும் வாழ்விடம் இழந்து ஓடினவனுக்கு அழுகை வரும்.//

Its true... I could not control my tears in the cinema.

I agree with the anonymous btw

Mukilini

HK Arun said...

//எனக்கு மிக வலித்தது..//

வலித்துக்கொண்டே இருக்கிறது
படம் பார்க்காமலேயே.

உங்கள் விமர்சனப் பார்வையும் அதன் உற்று நோக்கும் பலவற்றையும் பலவாறு சொல்கின்றது.

மிக்க நன்றி

Midas said...

இந்திய ஊடகங்கள் கூட இப்படத்தைப் பற்றி எதிர் மறையான கருத்துக்களையே வெளியிட்டன.
ஆனாலும் நல்ல படங்களின் விமர்சனங்கள் படத்தை போலல்லாது உடனடியாக வந்தால் நல்லது.
நான் வாசித்த ஆ. ஓ பட விமர்சனத்தில்-கருத்துக்களில் சிறந்த-நடுநிலையான-ஊக்குவிக்கின்றதாக இது உள்ளது.
-நன்றி-

Anonymous said...

படம் பார்க்கும்போதிருந்த அதே வலி மீண்டும் உங்கள் விமர்சனம் படிக்கையில் ஹ்ம்ம்

புல்லட் said...

புதிய முயற்சியென்று மறுப்பதற்கில்லை.. சற்று வன்முறையும் ரத்தமும் அதிகமாகிவிட்டது.. மறக்க நினைப்பவற்றை மறுபடியும் ஞாபகப்படுத்தியதுதான் எனக்கு பெருமூச்செறிதலையும் கவலையையும் ஏற்படுத்தியது.. எம்மை பலர் அனுதாபமாக பார்க்கிறார்கள் என்ற கவலை ஏற்பட்டது.. முதல் பாதி விறுவிறுப்பு.. அதிலும் அந்த கீறப்பட்ட படங்களை ஓடவிட்டு முன்னர் நடற்த சம்பவங்களை சிறந்த பின்னணி இசையுடன் வழங்கியபோது எனக்கு மெய்சிலிர்த்தது.. நடுவில் மந்திர தந்திரங்களை கொண்டு வந்தமையும் ரசிக்கவில்லை.. ஒருதடவை கடமைக்கு பார்க்கலாம் என்பது என் கருத்து..

அத்திரி said...

அருமையான விமர்சனம் லோஷன்................

sellamma said...

அற்புதமான அலசல் அண்ணா,,,
இந்த படத்தில் எனக்கு பிடித்த விடயமே,, பார்த்தீபனும் , தாய் தின்ற மண்ணே பாடலும் தான்,,,
படம் பார்த்து பல நாட்கள் ஆகியும் பார்த்தீபனின் பாத்திரப்படைப்பு இன்னும் என் மனதில் இருந்து அகலவில்லை,,,
உங்கள் பதிவை பார்த்ததும் மீண்டும் பார்க்கணும் போல் இருக்கு,,,

சரவணன். ச said...

என் மனதில் உள்ளதை சொல்வது போல் உனர்ந்தேன். சோழ நாடு - ஈழமாகவும் & பார்த்திபன் - பிரபாகரனாகவும் தோன்றின. நிஜத்தில் தலைவர் சாகவில்லை என்றே என் உள் மனது சொல்கிறது !

தாய் தின்ற மண்ணே பாடல் தந்த வைரமுத்துக்கும் செல்வராகவனும் என் நன்றிகள்.

tsraam said...

சோழ மன்னனுடைய காலை நரபலி கொடுத்த இரத்தம் தோய்ந்த தரைமீது வைப்பதாக காட்டும் காட்சி பற்றி விமர்சிக்கவில்லையே? சோழ வரலாறில் இதற்கேதேனும் ஆதாரம் உள்ளதா? ஒரு இனத்தின் வரலாறை, வாழ்க்கை முறையை காட்டும் போது கவனமாக இருக்கவேண்டும் அதுவும் சொந்த இனத்தினுடைய வரலாறு எனும்போது இன்னும் சாதகமாக இருக்கவேண்டும் என்பதை உங்களைப்போன்ற விமர்சகர்கள்தான் எடுத்து சொல்ல வேண்டும். எங்களுக்கு எல்லாம் வீர பாண்டிய கட்ட பொம்மனும் வ.உ.சிதம்பரமும் எப்படிப்பட்டவர்கள் என்று படத்தில் பார்த்துதான் தெரியும்... A film can over write the history

archchana said...

என்ன ............மன்னன் முடிந்தாலும் மண்ணுக்கான தேடல் முடியா என்பதா .........கடவுளே இன்னும் 50 வருடங்கள் ...... எனக்கும் வேண்டாம் என் பிள்ளைகளுக்கும் இந்த தேடல் வேண்டாம் நாம் படுகின்ற வேதனை இந்த பிறவிக்கு போதும். நாம் பட்ட துன்பத்தை படம் மூலமாக நீங்கள் உணர முயற்சித்துள்ளீர்கள் .நாலு பேரிற்கு வலியை நினைவு படுத்தியுள்ளீர்கள் அதற்கு நன்றிகள்.
படங்கள் பார்க்கும் மனநிலையில் நான் இல்லை. நித்தமும் எம் தொண்டைக்குள் ஏதோ இருந்து வலித்த படி இருக்கும் எமக்கு படம் பார்ப்பதன் மூலம் வலியோ கண்ணீரோ வரா. ஆனாலும் எமக்காக யாராவது அழுதால் சேர்ந்து அழுவோம். அது மட்டுமே இப்போ எம்மால் முடியும்.

ஆ.ஞானசேகரன் said...

//இதை கண்ட லொஜிக்,லொட்டை,லொசுக்கு சொல்லாமல் சிறு குறைகளைப் பொருட்படுத்தாமல் இது போன்ற இனி வரும் படங்களுக்கு வரவேற்பை நாம் அளிக்கவேண்டும்.//

மிக சரி

EKSAAR said...

//இத்தனை விஷயங்களை ஆழமாகப் பார்க்க அவருடன் இணைந்து பணியாற்றிய ஒருவரோ சிலரோ இந்த விஷயங்களில் ஆழ்ந்த அனுபவம்,அறிவு உடையவராக இருந்திருக்க வேண்டும்.//

அப்படி பார்த்தால் உங்களுக்கும் இருக்கிறது போலிருக்கிறதே.. :D:D:D

Anonymous said...

வலிகள் வடுக்களை ஞாபகப்படுத்தி இருக்கிறது!!! :( அருமையான விமர்சனம் அண்ணா!

KUMS said...

அண்ணா, பாண்டியர்களுடான யுத்தத்தின் போது சோழ மன்னன் அணிந்து வரும் தலைப்பாகை (சிவப்பு நிற பின்னணியில் மஞ்சள் நிற வட்டம் ) ஏதோ ஒரு கொடியை ஞாபகப்படுத்துகின்றது. அதுமட்டுமல்லாமல் படத்தில் வரும் இந்திய இராணுவ வீரர்களின் முகங்கள் நம் நாட்டு பேருந்துகளினதும் முச்சக்கரவண்டிகளினதும் பின்புறங்களில் பார்த்த முகங்களாகவே உள்ளன.

மயூரேசன் said...

நான் நினைத்ததை அப்படியே இந்தப் பதிவு எழுதியிருப்பதால் அடியேன் பதிவு போடும் எண்ணத்தையே கைவிட்டு விட்டேன்.

தமிழில் இப்படியான திரைப்படங்களே வருவதேயில்லை என்று கவலைப் பட்டோர்க்கு அருமையான தீனி. லிபர்ட்டியில் போய் அவதார் பார்த்து கமரோன் விடும் கரடியை வாயைப் பிளந்துகொண்டு பார்க்கும் நம்மவர்கள் ஆயிரத்தில் ஒருவனில் ஆயிரம் லொஜிக் தேடுகின்றார்கள்.

இந்தப் படம் தமிழில் தோல்வி என்று எங்கேயோ படித்தேன் ஆனால் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் என்றும் அறிந்தேன். தோல்வி உண்மையென்றால் நாசமாகப் போகட்டும் தமிழ் சினிமா இரசிகர்கள்.

கரன் said...

http://sify.com/movies/tamil/fullstory.php?id=14931646&cid=13525926

ARV Loshan said...

நன்றி சுதன்..

இரா பிரஜீவ் said...
ஆழமான அலசல் எண்டு கொஞ்சம் ஆழமாகவே தோண்டி போட்டியள். உங்கட நாட்டு நிலவரம் இப்ப எப்படி? //

தண்ணீர் வாற ஆழம் இல்லையே.. ;௦ நலமே வளமாக உள்ளோம்..



தங்கள் நாட்டில் அப்படி ஏதுமே நடைபெறவில்லை என்ற அரச ஆணையை தாங்கள் உரசும் போது பழைய நினைவுகள் தவிர்க்க முடியவில்லை//

:(

ARV Loshan said...

Vijayakanth said...
எங்கே நீங்களும் இதற்கு எதிர்மறை விமர்சனம் கொடுத்துவிடுவீர்களோ என நினைத்தேன்......இவ்வாறான முயற்சிகளை வரவேற்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்திலாவது குறைகளை மறந்து இதனை வர்த்தக ரீதியில் வெற்றிபெற செய்யவேண்டும். அப்போதுதான் தரமான சினிமாக்களை இதுபோன்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியும்...
கதையை பிடிக்காதவர்கள் தான் புரியவில்லை என்னும் கருத்தை முன்வைக்கிறார்கள்....O/L தமிழ் ஆனந்தன் சார் கிட்ட பாட்டுக்கு பொருள் படிச்சதால இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் வசதியா இருந்துச்சு....நான் படிச்சது இப்போ தான் எனக்கு பயன்பட்டிருக்கு...!
Avatar, Harry potter போன்ற படங்களை விமர்சனமின்றி பார்ப்பவர்களுக்கு தமிழில் வந்த படங்களை வரவேற்க தோன்றுவதில்லை என்பது எனது கவலை......விஜய் பறப்பதை ரசிக்கத்தெரிந்தவர்களுக்கு இப்படத்தில் லாஜிக் தெரிவது தான் ஆச்சர்யம்....//

அது தான் நம்மவரிடம் உள்ள பிரச்சினை.. ஒரு டெம்ப்ளேட் மனசோடு படம் பார்க்கிறார்கள்..


இப்படத்தை ஈழத்தோடு ஒப்பிடுவது பாடல்கள் வெளியானபோதிலிருந்தே நடைபெற்றதுதான். எனினும் இப்படி இவ்வளவு ஒன்றிப்போகும் என எதிர்பார்க்கவில்லை.....உங்கள் இன்றைய பதிவினை அரசு கவனிக்குமாயின் இத்திரைப்படம் இலங்கையில் திரையிட தடைவிதிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை...!//

அது தான் அரசுக்கு வேலை வைக்காமல் நம்மவர்களே படத்தைக் கொஞ்ச நாளிலேயே தூக்குமலவுக்கு 'அமோக' ஆதரவு குடுத்துட்டாங்களே.. ஆனால் இறக்குமதி செய்தவர்களுக்கு இலாபம் என அறிந்தேன்..

சோழன் பயணம் தொடரும் என நம்புவோம்...!//

நம்பிக்கை தானே வாழ்க்கை..

ஆனால் மீண்டும் அவ்வாறான உயிர்ப் பலிகள் வேண்டாம்..

ARV Loshan said...

Anonymous said...
/மூன்று ஆண்டுகள் ஏன் எடுத்தது என்ற கேள்விக்கு எம்மால் பதில் சொல்ல முடியாது/

சோழர்களின் வரலாற்றோடு பின்னிய ஒரு கதைக்குச் சரியான முடிவைக் கொடுக்கும் நோக்கில், முடிவு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளத்தான் செல்வா தாமதித்தாரோ?

- நாதன்//

ம்ம் இருக்கலாம்.. :(



ஜனகன் said...
வணக்கம் அண்ணா.
நான் ஜனகன். தற்பொழுது USA இல் உள்ளேன்.
தங்களுடைய இந்தப்பதிவு "ஆயிரத்தில் ஒருவன்" பார்க்கவேண்டும் என்ற ஆவலை என்னுள் தூண்டியுள்ளது.
ஆனால் நான் வசிக்கும் இடத்தில் தமிழர்களோ, தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளோ இல்லை.
நான் இத்திரைப்படத்தை பார்ப்பதற்கு ஏதாவது வழி உள்ளதா?
இருந்தால் தயவுசெய்து அறிவிக்கவும்.//

தேடித் பார்த்தேன் சகோ.. :( எங்கேயாவது தரவிறக்கம் செய்யும் வழிகள் இருக்கோ தெரியல..


root said...
வாழ்த்துக்கள் சிறப்பான அலசல்... படம் 3 முறை பார்த்தும் கண்ணீர் வந்திச்சு... உங்கள் விமர்சனம் வாசித்தும்...... but சோழரை இப்படிக்காட்ட வேண்டிய அவசியம் என்ன? சரி நீங்கள் சொன்னது மாதிரி //குறைகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து நிறைகளை நிறைவாகப் பார்க்குமிடத்தில் எனக்கு ஆயிரத்தில் ஒருவன் சொல்லவந்த விடயம் பிடித்திருக்கிற///

அது.. நன்றி

ARV Loshan said...

saisayan said...
tharamaana vimarsanam.
ithaithan ethirparthirunthen...

குறைகள் தவிர்ப்போம் என நினைத்தாலும், பல இடங்களில் இரட்டை அர்த்தம் எல்லாம் இல்லாத நேரடி பாலியல் சம்பாஷனைகள்
இந்த ரத்தம் தெறிக்கும் வன்முறைகள் கொஞ்சமாவது குறைந்திருந்தால் குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் அளவுக்கு ஆயிரத்தில் ஒருவன் ஓடி இருப்பான்


நன்றி சகோ..

saisayan said...
Tamil Padam விமர்சனம் எப்போ வரும் ?..
எதிர்பார்ப்புடன் இருக்கோம்//

இலங்கையில் திரையிடப் படாததால் ஒரிஜினல் DVD வரும் வரை வெயிட்டிங்..

அவசரமாக வேண்டுமென்றால் உடனே சென்னைக்கான் டிக்கெட் ஒன்று எடுத்து தாருங்கள்.. ;)

===============================

===============================


Subankan said...
பார்க்கும்போதே வலித்தது அண்ணா, உங்கள் எழுத்தில் படிக்கும்போது இன்னும் அதிகமாக//


:(

=======================

rangan said...
ஆயிரம் சினிமாக்களில் ஒருவன் - ஆயிரத்தில் ஒருவன்//

வரும் பல குப்பைகளைப் பார்க்கும் போது இப்படியும் சொல்லலாம்.

ARV Loshan said...

என்.கே.அஷோக்பரன் said...
நல்ல படம். நல்ல விமர்சனம்.!//

நன்றி அசோக்..

================

கன்கொன் || Kangon said...
புதிய முயற்சி என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்றாலும் எனக்கு படம் ஒட்டிக் கொள்ளவில்லை.//

அது ஒவ்வொருவரின் தனி மனப் பாதிப்புக்கள்..



adventure வகைப் படங்கள் பார்க்க நன்றாக இருக்கும் என்றாலும் எதிர்பார்ப்புகள் அதிகம் என்பதாலோ என்னவோ எனக்கு லொஜிக் ஓட்டைகள் இடித்தன.
அத்தோடு தேவையற்று சில அம்சங்களைப் புகுத்தியது போல் தோனறியது.//

இருக்கலாம்.. இது கற்பனாவாதப் படம்.. லொஜிக் லோசுக்குகள் பார்க்கக் கூடாது.. அவதாரில் இல்லாத லொஜிக் ஓட்டைகளா?



ஒற்றை அர்த்த (இது இரட்டை அர்த்தமில்ல) வசனங்களையும் தவிர்த்திருக்கலாம்.//

நானும் உடன்படுகிறேன்.. என்ன செய்ய அது செல்வாவின் முத்திரையாகி விட்டது..



இரசனை வேறுபாடு... ம்... :)//

ம்ம்ம்....

ARV Loshan said...

VARO said...
அடடே நான் இன்னும் பார்கலையே! சி.டி ல பார்க்க விருப்பமில்லை. எங்கையாவது புது ரீல்ஸ் கிடைக்காட்டி திருப்ப போடுவங்கள் பார்ப்பம்.//

கட்டாயம் பாருங்கோ.. பார்க்கவேண்டிய படம்
=================

திகாஷ் said...
ஆயிரத்தில் ஒரு(நல்ல) விமர்சனம்.!//

நன்றி சகோ

ARV Loshan said...

மருதமூரான். said...
லோஷன்,

‘ஆயிரத்தில் ஒருவன்’ குறித்த தங்களின் இந்த விமர்சனக் கட்டுரை (எவ்வளவு நீளம் ஐயா) தங்களின் மனத்திலுள்ள வடுக்களையும் எண்ணவோட்டத்தினையும் சரியாக சொல்லியிருப்பதாக உணர்கிறேன். படத்தினை இன்னமும் பார்க்கவில்லை. தற்போதைக்கு பார்க்கவும் பெரிதாக நேரம் இல்லை. அவ்வளவு ஆணி அடித்தல்கள் வரிசையாக இருக்கின்றன.//

ஆணி எல்லாம் அடித்தாகியாச்சா?

ஆனால், இந்தப் படத்தினை தனித்திருந்து பொறுமையாக பார்ப்பதற்கு தீர்மானித்திருக்கிறேன். அதற்கு தங்களின் இந்த விமர்சனமும் ஒரு காரணம். //

நன்றி.. அந்தளவு தூரம் என் எழுத்துக்கள் இருந்தமை மகிழ்ச்சி



இயக்குனர் செல்வராகவன் குறித்து எனக்கு 60 வீதமான நம்பிக்கையுண்டு. அது, அவரின் வெற்றிப்படங்கள் வந்தபோது பலராலும் அளவுக்கதிகமாக புகழப்பட்ட போதும் சரி, புதுப்பேட்டை (இந்த படத்தின் மையக்கருத்துள்ள ஆசியப் படமொன்றை பார்த்ததாக எனக்கு ஞாபம்.) என்கிற படம் தோற்றபோதும் சரி. அவரின் மீது நம்பிக்கையிருந்தது. //

இந்தப் படமும், புதுப்பெட்டையுமே எனக்கு செல்வா பற்றி மதிப்பு உருவாக்கிய இரு படங்கள்..
புதுப்பேட்டை ஒரு லத்தீன் அல்லது இத்தா;இய படத்தின் தழுவல் என நினைக்கிறேன்..



ஆயிரத்தில் ஒருவன் மீது மறை விமர்சனங்கள் அல்லது அளவுக்கு அதிகமாக யதார்த்த மீறல்கள், கதை ஓட்டம், ஆபாசம் என்ற கோணங்களில் விமர்சனங்கள் அதிகளவில் வருகிறன. வாசிக்கிறேன். அதுவும், சாருவின் விமர்சனமும் வாசித்து ஆச்சரியப்பட்டேன். (கோவா படத்தினை நல்ல படமென்று கூறியிருக்கிறார் அவர்).//

வழமையாகவே தன்னை வித்தியாசப்படுத்திக்காட்டும் ஒரு முயற்சியாகவே இவை இரண்டையும் நான் கருதுகிறேன்..



தமிழர்களுக்கு என்று அற்புதமான (அற்பமான) இரண்டு குணங்கள் உண்டு. ஒருவர் மீது இலவுகாக அரசியல், அமைப்பு அல்லது மத சாயம் பூசுவது முதவாவது. இரண்டாவது ஒரு விடயத்தை அளவுக்கு அதிகமாக புகழ்வது அல்லது முற்றுமுழுதாக நிராகரிப்பது. இந்த இரண்டு குணங்களையும் நாம் திருத்திக்கொண்டால் பல விடயங்கள் சரியாக நடக்கும். தற்போது, ஆயிரத்தில் ஒருவனிலும் அதுவே நடப்பதாக எனக்கு படுகிறது.//

மிக சரியாக சொன்னீர்கள்.. எளிய தமிழ்ச் சாதி..

ARV Loshan said...

என்.கே.அஷோக்பரன் said...
உங்கள் விமர்சனம் சிறப்பு.//

நன்றி



இந்தப் படத்தைப் புரிந்துகொள்ள கொஞ்ச முதிர்ச்சி அவசியம். காமம் என்பதைக் குறையாக இந்தப் படத்தில் சொல்கிறார்கள் - எத்தனையோ ஆங்கில, ஹிந்திப் படங்களோடு பார்க்கையில் இதெல்லாம் ஒன்றுமில்லை என்பது வெளிப்படையாகத் தெரியும்.//

நிச்சயமாக.. சொல்லப்படும் குறைகளில் பல நொட்டை,நொள்ளை சாக்குகள்..



இந்த வகைப் புதுமுயற்சிகள் தமிழில் தொடர வேண்டும். எத்தனை காலம் தான் ஒரே மாதிரிப் படங்களை “பன்றி”, “குதிரை”, “அம்பு” எண்டு வேற வேற பெயரில பார்க்கிறது? ;-)//

ஹா ஹா.. நம்மவர்களுக்கு விளங்குதில்லையே.. வரப்போகுது சுறா.. தயாராகுங்கள்..

================

மதார் said...
see here

http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/01/blog-post_29.html //

பார்த்தேன்..

rooto said...

துணிச்சலான பார்வை!! தங்களுக்கு தனிப்பட்ட முறையில் நேர்ந்த சில விடயங்களுக்கு பிறகும் தாங்கள் மனதில் பட்டதை சொன்னவிதம் அருமை!! சில அதிகப்பிரசங்கிகள் இப்படத்தை கடமைக்கு பார்க்கலாம் எண்டு சொல்லுவதும், கோவா போன்ற படங்களை குப்பை என சொல்லுவதும் தாங்கமுடியவில்லை!! இவங்கள் விஜய் படத்த பார்த்து பார்த்து சினிமாவின் ஆற்றல், கலைநயம், உண்மையுடன் ஒன்றிபோகும் தன்மை, சிக்கல்கள், தொழில்நுட்பவேலைகளை எல்லாம் புறகணித்துவிடுவார்கள். படத்தில் சில,பல ஓட்டைகள் இருந்தாலும் புதிய ஒரு அத்தியாயத்திற்கு தமிழ் சினிமாவை எடுத்து செல்ல நடந்த சிறிய முயற்சி இதை வெற்றியடைய செய்ய மறுத்தால் நாம் தொடர்ந்து விஜய் பாணிபடங்களை பார்க்க சபிக்கபடுவோம்!!!

ரவி said...

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

Unknown said...

தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

Unknown said...

தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்துக்கள்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner