June 17, 2011

நாங்கள் கையாலாகாதவர்கள்



நாங்கள் கையாலாகாதவர்கள் 



என்னால் முடியவில்லை..
எம்மால் முடியாது..
நாம் கையாலாகாதவர்கள்

இரண்டு வருடங்களுக்கு முன்னர்
ஜனவரி மாதத்தில் நாம்
என்ன செய்துகொண்டிருந்தோம்..
யார் யாருடன் மகிழ்ந்திருந்தோம்..
என்னென விஷயங்களில் இதயத்தைத் தொலைத்து
இனிமையான பொழுதுகளில் இருந்தோம்...
எமக்கு இப்போது
ஞாபமில்லை.

ஆனால் அவர்கள்????
ஒரு கையில் உயிரும்
இன்னொரு கையில்
அறுந்து தொங்கும் உடல் உறுப்புமாக
ஓடிக் கொண்டிருந்தார்களே..
நேற்று மீண்டும் அவர்கள்
காணொளிகளாக..

துண்டு துண்டாக முன்பு பார்த்த அத்தனையும்
மீண்டும் தொகுப்பாக..

குருதியும், குண்டுகள் பட்டுத்
தெறித்த உடல்களும்,கோரங்களும்,
ஒப்பாரி,அலறல்,சோகக் கூச்சல்களும்....
குரூரங்களைக் கலங்கிய கண்களுடன் மீண்டும் பார்த்தேன்..
இவை தான் எம் வரலாறு..
அடுத்த தலைமுறைக்கு
நாம் எடுத்துச் சொல்லப்போவது..
உலகுக்கே எடுத்துச் சொல்லி இரண்டு வருடங்களாக எதுவும் காணவில்லை;
இனியும் காண்போம் என்றும் நான் நம்பவில்லை

ஐ.நா அம்போ என்று விட்டு விட்டது
ஐயோ என்று நாம்
அலறினாலும், அம்மா என்று கதறினாலும்
யாரும் வரார்..
எமக்கு எல்லாம் இனி நாமே..
அரையாய் காலாய் எஞ்சிய அவர்களுக்கும்
நாம் முடிந்தால் எல்லாமாய் மாறலாம்..
அனுமதிக்கப்பட்டால்..



இன்று,
நாமெல்லோரும் இங்கே நாமாக நலமாக..
ஆனால் அவர்கள்?
எத்தனை பேர் அவர்களாக?
அவயவங்கள் இல்லாமல் எத்தனை பேர்?
ஆங்காங்கே அகதிகளாக எத்தனை பேர்?

ஆனால் நாம் மறக்கவில்லை.
எங்கள் குரல் வளைகள் இங்கே
பல விடயங்களில் சத்தம் வராத
ஊமைக் குழல்களாகவே இருக்கப் பழகிவிட்டன

விழிகள் அசைத்தாலே
விசாரிக்கப் படும் பூமியில்
குரல்கள் எழுப்பும் நிலையில்
அன்றும் நாம் இல்லை
இன்றும் நாம் இல்லை

எம்மால் முடிந்த இரக்கத்தை நாம் பட்டுக்கொண்டோம்
கோபத்தால் கொதித்துக்கொண்டோம்
கண்கள் குளமாகக் கரைந்தழுதோம்
ஏனென்றால் நாம் இயலாதவர்கள்

இறப்புக்களைப் பார்த்து
இரத்தம் பார்த்து அடுத்த நிமிடமே
அடுத்த நகர்வுக்குத் தயாராகிய அவர்களைப் போலவே,

விடுப்புக்களைக் கேட்டு அடுத்த நாளே
மனது மாறி எம்மை நாமே தேற்றும் ஒரு இயந்திர
வாழ்க்கை இங்கே எமக்கு வாடிக்கை...

அவர்களின் மரணங்கள்
மௌன சாட்சியாக மாறாதா என்று
நாமும் ஏங்கினாலும்
காட்சிகளையே ஏற்காத இடத்தில்,
சாட்சிகளாய் யார் மாறுவர்?

வேலிக்கு ஓணானாய்
சர்வதேசத்தின் அண்ணன்மாரும்
பெரிசுகளும்

குரல் எழுப்பும் ஒரு சிலரின்
குரல்கள் சத்தமாக ஒலித்தாலும்
எல்லா இடத்திலும் கேட்டாலும்
பதில்கள் இல்லை...
வேண்டிய பதில்களும்
வருவதாக இல்லை..

மரணங்கள் சத்தங்களோடு வந்தன..
நாங்கள் மனதுக்குள் அழுது
மெளனமாக இருந்தோம்..

இப்போது இந்த மௌனங்களும் பயங்கரமாகவே இருக்கின்றன..

நாங்கள் கையாலாகாதவர்கள்..
அதனால் தான் வார்த்தைகளோடும் 
வருத்தங்களோடும்
பேச்சுக்களோடும் பொருமல்களோடும் 
ஏக்கங்களோடும் எதிர்பார்ப்புக்களோடும்
பின் ஏமாற்றங்களோடும் மட்டும்
முடங்கிப்போனோம்...


**** இரண்டு வருடங்களாக இடையிடையே சிறு சிறு துண்டுகளாகப் பார்த்த கொடூர, சோகக் காணொளிகளை முழுமைத் தொகுப்பாக நேற்றிரவு பார்த்து, இன்று நாள் முழுவதும் தளம்பிய, ஒரு நிலையற்ற மனதுடன் புலம்பிக் கொட்டியது....

என்னால் இப்போது முடிந்தது இதுவே....
மன்னியுங்கள்....




37 comments:

கார்த்தி said...

முடியவில்லை....

Shafna said...

I will comment later...

Anonymous said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை .. உண்மையிலே நாம் கையாலாகதவர்கள் (ஆக்கப்பட்டுவிட்டோம்)

Anonymous said...

//இறப்புக்களைப் பார்த்து
இரத்தம் பார்த்து அடுத்த நிமிடமே
அடுத்த நகர்வுக்குத் தயாராகிய அவர்களைப் போலவே,

விடுப்புக்களைக் கேட்டு அடுத்த நாளே
மனது மாறி எம்மை நாமே தேற்றும் ஒரு இயந்திர
வாழ்க்கை இங்கே எமக்கு வாடிக்கை...
// மனதை நெருட வைத்த வரிகள் :-(

Unknown said...

அனைத்துக்கும் பதில் சொல்ல ஒரு காலம் வரும். அன்னேரத்தில் ஒவ்வொருவரும் தத்தமது பணிகளை செவ்வனவே செய்தால் சரி

Gnanathayalan said...
This comment has been removed by the author.
Gnanathayalan said...

அசோக்பரனின் பதிவின் இறுதி வசனங்கள்

தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் ஆயினும் தர்மம் மறுபடியும் வெல்லும்.

காலங்கள் குறிப்பிட்டு சொல்லமுடியாவிட்டாலும் என்றாவது ஒருநாள் எமக்கும் நீதி கிட்டும். இறந்த ஒவ்வொருவரின் ஆத்துமாக்களுக்கும் அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

Ashwin-WIN said...

கடல் கடந்தவன் மெய்யுரைக்க-மனம்
கல்லானவன் பொய்யுரைக்க
காலடியில் காலன் இன்று எம்
கை கட்டி வைக்க - உண்மைகள்
கவிழ்ந்திடச்செய்தால் உன்
கருவறை வந்து உன் சிலை
கவிழ்ப்பேன் கடவுளே..

lalithsmash said...

''எம்மால் முடிந்த இரக்கத்தை நாம் பட்டுக்கொண்டோம்
கோபத்தால் கொதித்துக்கொண்டோம்
கண்கள் குளமாகக் கரைந்தழுதோம்
ஏனென்றால் நாம் இயலாதவர்கள்''

சுடுகிறது....

anuthinan said...

:(((

என்னாலும் இங்கு பின்னூட்டம் செய்வதை தவிர பெரிதாக எதையும் செய்து விட முடியாது

நிரூஜா said...

:|

Anonymous said...

//வேலிக்கு ஓணானாய்
சர்வதேசத்தின் அண்ணன்மாரும்
பெரிசுகளும்//

இன்றைய நிதர்சனம்

Anonymous said...

//வேலிக்கு ஓணானாய்
சர்வதேசத்தின் அண்ணன்மாரும்
பெரிசுகளும்//
இன்றைய நிதர்சனம்

Shafna said...

நேற்று போல் இன்று இல்லை. இன்று போல் நாளை இல்லை.

சுதா SJ said...

காணொளி பாக்கும்போது கொடுத்த வேதனையை கொஞ்சமும் குறையாமல் கொடுத்துவிட்டு போய் விட்டது உங்கள் கவிதை.. மனசை யாரோ இறுக்கி புளிவதை போன்ற ஒரு வேதனை உணர்வு அண்ணா

சுதா SJ said...

//ஆனால் நாம் மறக்கவில்லை.
எங்கள் குரல் வளைகள் இங்கே
பல விடயங்களில் சத்தம் வராத
ஊமைக் குழல்களாகவே இருக்கப் பழகிவிட்டன//

நிதர்சன வரிகள்

Anonymous said...

நான் நெடு நாட்களாக இந்த வலை பூக்களை indli இல் வசித்து கொண்டிருக்கிறேன் .ஆனால் ஒருபோதும் யாருக்கும் பின்னூட்டம் போட்டதும் இல்லை ,பதிவு எழுதும் ஆர்வமும் இல்லை.அதனால் என்னை அடையாளப்படுத்தி கொள்ள ஒரு profile என்னிடம் இல்லை அதற்கு என்னை மன்னிக்கவும் .ஆனால் இன்று இந்த பதிவை பார்த்த போது ஒரு பின்னூட்டமாவது போட வேண்டும் என்று தோன்றியது.இன்றைய பெரும்பாலான இலங்கை தமிழ் இளைஞர்களுடைய மன நிலையை சரியாக பிரதிபலிக்கும் பதிவு.
"என்னால் இப்போது முடிந்தது இதுவே...
மன்னியுங்கள்..." என்ற வரிகள் உங்களுக்கும் மட்டும் பொருந்த்தமானது இல்லை.யோசித்து பார்த்தேன் எனக்கும் மிக சரியாக பொருந்துகிறது. மிக்க நன்றி இந்த காத்திரமான பதிவிற்கு ..
வாசகனாய் ....
-தர்ஷன் -

ம.தி.சுதா said...

////எமக்கு எல்லாம் இனி நாமே..////

உண்மை தான் அண்ணா நாமே எம்மை தேற்றுவதை தவிர யாரிடம் போகலாம்...

ஷஹன்ஷா said...

////கொடுமையை கண்டவன் கண்ணையிழந்தான்
அதை கோபித்துக் தடுத்தவன் சொல்லையிழந்தான்
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி..
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி..////

என்ற வரிகள் ஞாபகம் வருகின்றன..
இருதயம் நின்ற நிலையில் காட்சிகளை பார்த்தோம்.. ஒரு நாள் வராமலா போகும் அனைத்துக்கும்..

எமக்கு அடுத்தவன் உதவி கிடைப்பது மலையேறி விட்டது.. இனி தாங்கள் சொன்னது போல் எமக்கு எல்லாம் இனி நாமே..!

யோ வொய்ஸ் (யோகா) said...

நாங்கள் கையாலாகாதவர்கள்.....

maruthamooran said...

////மரணங்கள் சத்தங்களோடு வந்தன..
நாங்கள் மனதுக்குள் அழுது
மெளனமாக இருந்தோம்..

இப்போது இந்த மௌனங்களும் பயங்கரமாகவே இருக்கின்றன../////

இதைவிடுத்து வேறு என்னத்தை எங்களால் சொல்ல முடியும்.

வலி பெரியது. வடு அதைவிடப் பெரியது. இரண்டையும் அனுபவித்தவர்கள் நாங்கள்.

Nishan Thirumalaisami said...

#\\நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.//#

என்றும் நமக்கு நாமே.... எழுந்து நிற்ப்போம்... இவனுக்கு ஒரு தேசம்.. நமக்கு உலகே தேசம்....

Shafna said...

காணொளி கண்டு பதறி,தளம்பி,நீங்கள் புலம்பிய வார்த்தைகள்,கண்ணீர் கலந்த கவிதையாய் கண்டேன். வரிகளின் ரனங்கள் கண்டு அழுவதா? கவிதையின் நயங்கள் கண்டு புகழ்வதா? காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பதாலோ என்னவோ,இன்றைய தலையின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.. அப்படியே சென்றுவிட முடியாதே.நாளைய தலையின் கேள்விக்கேனும் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.அன்று நாம் இல்லாவிட்டாலென்ன? நம் சமுதாயம் காக்கப்பட வந்த தலைமுறை இருக்கத்தானே போகிறது.ஒன்றை அடைய ஒன்றை இழந்துதானே ஆக வேண்டும்..இன்றைய தலைமுறை இழந்த அந்த ஒன்று நாளைய தலைமுறை அடையும் ஒன்றாகாதா? இது இப்படித்தான் என்றிருக்க,எதைத்தான் மாற்ற முடியும்? இப்படித்தான் என்று இருப்பதுவும்கூட நாளைய நன்மைக்கான அத்திவாரம்தான் என்பதுவும் நாளை தெரிய வரும். அப்பொழுது எதுவும் நிரந்தரமில்லை என்ற நிம்மதிப் பெருமூச்சு தன்னாலே வரும்போது.. சந்தோஷப்படும் உங்கள் உள்ளத்தை காக்க இளமை இரத்தத்துடன் ஓர் அழகிய தலைமுறை காவலனாய் காட்சிதரும்..

தனிமரம் said...

நிதர்சனமான உண்மையை சொல்லியுள்ளீர்கள் நாங்களும் அழுது புலம்புவதைத்தவிர என்ன செய்ய முடியும்!

Anonymous said...

16 பேரு தீக்குளிச்சுக் கூட ஒன்னுமே நடக்கலையே? இதுக்கு அப்புறமும் ஒன்னும் நடக்காதுன்னுதான் தோணுது,ஆனா எதாச்சும் பண்ணனும்

வந்தியத்தேவன் said...

இதுதான் நிஜம். நிர்ஷனின் பதிவில் இருக்கும் வரிகள் ஞாபகம் வருகின்றது, உண்மையான வேதனையைப் பதிவு செய்தால் அடுத்த பதிவை எமலோகத்தில் இருந்துதான் எழுதவேண்டும், எங்கள் நாட்டின் ஊடகதர்மம் உலகறிந்ததுதானே.

vagishan selva said...

எழுத்துக்களால் என்ன செய்வது....... எழுந்து நின்றால் எம் இருப்பும் கேள்விக் குறிதான்....

Unknown said...

//குரூரங்களைக் கலங்கிய கண்களுடன் மீண்டும் பார்த்தேன்..
இவை தான் எம் வரலாறு..
அடுத்த தலைமுறைக்கு
நாம் எடுத்துச் சொல்லப்போவது..//

இப்போது பார்த்துவிட்டு அதே மனம் தளம்பிய உணர்வுடன் நானும்...

//உலகுக்கே எடுத்துச் சொல்லி இரண்டு வருடங்களாக எதுவும் காணவில்லை;
இனியும் காண்போம் என்றும் நான் நம்பவில்லை//

உண்மை! எதுவும் நடக்கப்போவதில்லை என்பதே இன்னும் வலிக்கிறது!

கவிதை.... ஒற்றைவரியில்....நெஞ்சை அழுத்துகிறது!

vanathy said...

You have summed up the feelings of many people.
Don't feel guilty.
For people like us living in the comfort of a truly democratic country ,it is easy to express our views and opinions without any fear,but for you it is not possible.
We understand.
Take care.

-vanathy

kobiraj said...

வாழ்க்கை ஒரு வட்டம் அண்ணா.எல்லோருக்கும் காலம் வரும்

JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்) said...

///விழிகள் அசைத்தாலே
விசாரிக்கப் படும் பூமியில்
குரல்கள் எழுப்பும் நிலையில்
அன்றும் நாம் இல்லை
இன்றும் நாம் இல்லை////

ஹ்ம்ம்...

கவி அழகன் said...

பிணமாக விழுந்தாலும் இனமாக விழுவோம் என்று இறுதிவரை இருந்த மக்களின் வேதனைகளை புரிவதோடு மட்டுமன்றி உதவியும் செய்வோம்
--

ஆதிரை said...

:-(
மனதை நெருடும் வரிகள்.

வடலியூரான் said...

ஐ,நா சபையா அது.. பொய் நா சபை..

maadhumai said...

We all deeply appreciate you concern. No words..thank you.

Anonymous said...

குருதி சிந்தி வீழ்ந்து மடிந்தவருக்கு எம் விழி நீர் சிந்தி அஞ்சலிப்பது போதுமானதா? விழ விழ எழுவோம் என்பது என்ன பொய்யா? நம்பிக்கை இது வாழ்க்கை அந்த நம்பிக்கை எம் தும்பிக்கை. யாரும் எமக்கு உதவ வேண்டாம் நாம் நாமாக மாறுவோம். வேற்றுமைகள் மறந்து தமிழனாய் ஒன்றுபடுவோம்.மற்றவர் கரம் நோக்கும் இழிநிலைவிடுத்து எம் கையே எம் மக்களுக்கு உதவ விரையட்டும். நிச்சயமாய் எழுவோம். உலகம் மெச்ச எழுவோம். இனக் கொலைவெறியர் நடுங்க எழுவோம். இங்கு உடல்கள் தான் நலமாக உள்ளது தமிழரின் இதயங்கள் அல்ல. மனம் தளர்ந்து விடாது தன்னம்பிக்கையும் உறுதியும் கொள்வோம். நிச்சயமாய் மறுபடியும் எழுவோம்.

Anonymous said...

நாம் மடிந்தோம் நம்மால்... பிறரை சாடி என்ன பயன்?
தாங்கொணா சோகங்களை தவிர்க்க....
துரோகத் தமிழினத்தை துறந்து செல்ல முயல்கிறேன்...
மன்னியுங்கள்....

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner